நாளை விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள். தேசிய இளைஞர்கள் தினம். அவரைப் பற்றிய சிறிய பகிர்வு
கைக்கட்டி இருந்தாலும் நான் தான் முதல்வன் என்பதை போன்ற கம்பீரமான தோற்றம்.எல்லாரும் என்னை நம்பு, சாமிய நம்பு அப்படின்னு ஏமாத்தின காலத்திலேயே “உன்னை நம்பு” அதுவே போதும்ன்னு சொன்னவரு.இந்த தைரியத்தை தான் இந்திய இளைஞர்கள் கிட்டயும் எதிர்ப்பார்த்தார்.”இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில தான் இருக்கு.அவர்களால் மட்டுமே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்”
நம்மள சுத்தி இருக்கறவங்க கூட நம்மலோட பலவீனத்தைப் பத்தித் தான் கிண்டல் பண்ணுவாங்க.அதை தான் பெரிசு பண்ணி பேசுவாங்க.ஆனா விவேகானந்தர் எப்பவுமே பலவீனத்தைப் பத்தி பேசனது இல்ல, நம்மளுக்குள்ள இருக்கற பலத்த பதியும் ஆற்றல் பற்றியும் தான் அதிகம் பேசி இருக்கார்.
“பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்”
“உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.”
“உன்னை நீயே பலவீனன் என நினைத்துக்கொள்வது மிகப்பெரிய பாவம்”
“உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை”
மனுசன்னாலே தப்பு பண்ணறவன் தான்.அதுக்காக செஞ்ச தப்ப திரும்ப திரும்ப நினைச்சு நம்மள நாமலே குறைவா நினைக்கக் கூடாது. அதைப் பத்தியும் அழாக சொல்லி இருப்பார்.
“நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.”
விவேகானந்தர் அப்படினாலே தன்னம்பிக்கையின் தலைவன். அவரின் வார்த்தைகள் காலத்தால் அழியாதவை, என்றைக்கும் தேவைப்படுவது.
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”
“எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது”
விவேகானந்தர் ஒரு ஹிந்துவா இருந்தாலும் அவர் என்னைக்குமே என் மதம் தான் பெரியது என்று சொன்னது கிடையாது.அவர் எப்பவுமே சொல்றது “கடவுள் ஒருவரே“.
எனக்கு ரொம்ப பிடிச்ச விவேகானந்தரோட ஒரு பொன்மொழி இது “பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்”
விவேகானந்தர் பத்தி இன்னும் சொல்லிட்டே போகலாம்.அவர பத்தின இரண்டு உண்மை சம்பவங்களைக் குறிப்பிட்டு இந்த போஸ்ட்ட முடிக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்த நேரம். ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். உடன் பயணம் செய்த ஆங்கிலேயர்களுக்கு இவரைப் பார்த்து இளப்பம்.மிக ஏளனமாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள் காவித்துணி அணிந்தவருக்கு எங்கே ஆங்கிலம் புரியப் போகிறது என்ற அலட்சியத்தோடு.
சிறிது நேரம் கழித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் சுவாமியின் தோற்றத்தின் வசீகரத்தினால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் உரையாடி விட்டு சென்றார். உடன் பயணம் செய்து, சுவாமியை ஏளனம் செய்தவர்களுக்கோ திகைப்பு, இவ்வளவு கண்ணியமான ஆங்கிலத்தில் உரையாடுகிறாரே என்று.
“சுவாமி, உங்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமே, அப்புறம் ஏன் நாங்கள் உங்களை ஏளனமாகப் பேசிய போது, அமைதியாக இருந்தீர்கள்?” என்று வினவினார்கள்.
சுவாமி புன்முறுவலோடு விடையளித்தார்:
“முட்டாள்களோடு பயணம் செய்வது எனக்குப் புதிய அனுபவம் ஒன்றுமில்லை!”
ஒரு தடவை விவேகானந்தரைப் பார்த்து ஒரு பெண், “உங்களைப் போல் எனக்கு, அழகாகவும், அறிவுள்ளதாகவும் பிள்ளை வேண்டும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்றாளாம். அதற்கு அவர், “நமக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்து, வளர்ந்து, அது உங்களை அம்மா என்றழைக்க, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!’ என்றாராம்.